பெங்களூருவில் நேற்று மந்திரி கோவிந்த் கார்ஜோள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஒரு வாரத்தில் வெளியிடுவேன்
கர்நாடகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தது. சித்தராமையா 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்காக காங்கிரஸ் அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்திற்காக காங்கிரஸ் தலைவர்கள் பாதயாத்திரை செல்கிறார்கள்.
மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு செய்த துரோகம், அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. தற்போது அதனை வெளியிட மாட்டேன். சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 3-ந் தேதி மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற இருக்கிறது. அந்த விசாரணை முடிந்ததும் என்னிடம் இருக்கும் ஆதாரங்களை ஒரு வாரத்திற்குள் வெளியிடுவேன்.
அதிகாரம், பதவிக்காக...
மேகதாது அணைகட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் அரசியல் செய்கிறார்கள். அதிகாரம், பதவிக்காக பாதயாத்திரை நடத்துகிறார்கள். மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்தில் இருக்கும் உண்மை தன்மை பற்றி மக்களிடம் ஏற்கனவே பா.ஜனதா அரசு வெளிப்படையாக கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்யவில்லை. மக்களின் நலனை கருத்தில் வைத்து கொண்டு மட்டுமே செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.