மும்பை,
புனேயை சேர்ந்தவர் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. ராஜீவ் சதாவ். இவர் ஹிங்கோலி தொகுதி எம்.பி.யாக இருந்தவர் ஆவார். கடந்த மாதம் 22-ந் தேதி ராஜீவ் சதாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் புனேயில் ஜகாங்கீர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அவர், மற்றொரு தொற்றால் பாதிக்கப்பட்டு கவலைகிடமான நிலையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறி இருந்தார்.
இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சதாவ் புதிய தொற்று காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், எனது நண்பர் ராஜீவ் சதாவின் இழப்பால் நான் மிகவும் வருந்துகிறேன். அவர் காங்கிரசின் கொள்கைகளை உள்ளடக்கிய மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட ஒரு தலைவராக இருந்தார்.
அவரது மறைவு நம் அனைவருக்கும் ஒரு பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.