புதுடெல்லி,
கிராமப்புறங்களை விட, நகர்ப்புறங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. டெல்லியில் சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் மற்றும் ஐசிஎம்ஆர் அமைப்பின் இயக்குநர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ராஜேஷ் பூஷண் கூறுகையில்,
ஐசிஎம்ஆரின் இரண்டாவது செரோ சர்வே' அறிக்கைப்படி, குறிப்பிடத்தக்க மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேரில் ஏற்படும் உயிரிழப்பில், இந்தியாவில் தான் குறைவாக உள்ளது என்றார்.
ஐசிஎம்ஆர் அமைப்பின் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறுகையில், செரோ ஆய்வின் படி. கணிசமான அளவு மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியம். இதற்காக 5 வழிகளை பரிசோதானை, தொடர்புகளை தேடுதல், கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தொழில்நுட்பம் ஆகிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
விரைவில் வரஉள்ள பண்டிகை காலம், மழை காலம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் சூழ்நிலை உள்ளதால், கட்டுப்பாட்டு திட்டங்களை மாநிலங்கள் கடைபிடிக்க வேண்டும். கிராமப்புறங்களை விட நகர்புறங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என்றார்.
கணிசமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு: செரோ ஆய்வில் தகவல்
கணிசமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக 2 வது கட்ட செரோ ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய அளவில் செரோ சர்வே 2 வது முறையாக கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் படி, இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 7.1 சதவிதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதேபோல், நகரின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில், குடிசைப்பகுதிகளில் தொற்று பாதிப்பு ஏற்பட இரண்டு மடங்கு அபாயம் உள்ளது. ஊரக பகுதிகளோடு ஒப்பிடுகையில் நகர்புற குடிசைப்பகுதிகளில் தொற்று ஏற்பட 4 மடங்கு அபாயமும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.