தேசிய செய்திகள்

சர்ச்சை ஓவியம் வெளியிட்ட விவகாரம் - காவல் நிலையத்தில் ரெஹானா பாத்திமா சரண்

சர்ச்சை ஓவியம் வெளியிட்ட விவகாரத்தில், தனது முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து ரெஹானா பாத்திமா போலீசில் சரணடைந்தார்.

திருவனந்தபுரம்,

கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா, கடந்த ஜூன் 19ம் தேதி அன்று அரை நிர்வாண உடலில் தனது மகன் மற்றும் மகள் வரைந்த ஓவியத்தை இணையத்தில் பகிர்ந்தார். இந்த பதிவுக்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு ரெஹானா பாத்திமா மீது வழக்கு பதிந்தது.

இந்த வழக்கை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார், ஆனால் அவரது ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ரெஹானா பாத்திமாவின் நடவடிக்கை சிறுவர் பாலியல் குற்றத்திற்குள் வருவதாக குறிப்பிட்டு, முன் ஜாமீன் மனுவை நிராகரித்தது. இந்நிலையில் எர்ணாகுளத்தில் உள்ள தேவரா தெற்கு காவல் நிலையத்தில் ரெஹானா பாத்திமா சரணடைந்தார்.