தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு; இன்று 2.5 லட்சம் பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் புதிதாக 1,27,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,81,75,044 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,795 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,31,895 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,55,287 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,59,47,629 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 18,95,520 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.