கொல்கத்தா,
பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், அறக்கட்டளைகள் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், டேங்கர்கள் மற்றும் மருந்துகளை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளன.
இதுதொடர்பாக எங்கள் அரசை அணுகின. மேற்கண்ட பொருட்களுக்கான சுங்க வரி, மத்திய ஜி.எஸ்.டி., மாநில ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ஆகிய வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டன.
இந்த வரிகள், மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை. ஆகவே, இப்பொருட்களின் வினியோகத்துக்கான முட்டுக்கட்டைகளை அகற்றும் வகையில், இப்பொருட்களுக்கு அனைத்து வகையான வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், நாட்டில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துங்கள். கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், சாதனங்கள், ஆக்சிஜன் ஆகியவற்றின் வினியோகத்தை பெருக்க வேண்டும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.