தேசிய செய்திகள்

கர்நாடக வனத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடக வனத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. இந்த நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், கர்நாடக வனத்துறை மந்திரியுமான ஆனந்த்சிங்குக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பல்லாரி மாவட்ட பொறுப்பு மந்திரியாக உள்ள ஆனந்த் சிங்கின் கார் டிரைவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர், ஒசப்பேட்டேயில் உள்ள அவருடைய இல்லத்தில் தனிமையில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி மந்திரி ஆனந்த்சிங், தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

அவருடைய மருத்துவ அறிக்கை நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில், மந்திரி ஆனந்த்சிங்குக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மந்திரி ஆனந்த் சிங், ஒசப்பேட்டேயில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட 2-வது மந்திரி ஆனந்த் சிங் ஆவார். ஏற்கனவே சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.