புதுடெல்லி,
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் நிதி காரே மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா திடீர் அதிகரிப்பால், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது தொடர்பான கவலைகள் எழுந்துள்ளன. இந்த பொருட்கள் சீராக கிடைப்பதற்காக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே மளிகைக்கடைகள், கிடங்குகள், மருந்து கடைகள் போன்றவை இயங்குவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கொரோனா சூழலை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, பதுக்கல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு, மக்களுக்கு சரியான விலையில் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொருட்களை வாங்குவதில் மக்கள் பதற்றமோ, அவசரமோ காட்டுவதை தடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.