புதுடெல்லி,
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக தலைமையகம் டெல்லியில் உள்ளது. அங்கு பணியாற்றி வரும் 2 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒருவர், அமைச்சகத்தின் சட்டப்பிரிவிலும், மற்றொருவர் மத்திய ஐரோப்பா பிரிவில் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்கள்.
இதையடுத்து, அனைத்து ஊழியர்களுக்கும் மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், 2 அதிகாரிகளுக்கு கொரோனா தாக்கியது பற்றி குறிப்பிட்டுள்ளது.
எனவே, சுகாதார அமைச்சகம் வகுத்த விதிமுறைகளை பின்பற்றுமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், வெளியுறவு அமைச்சகத்தின் மத்திய ஐரோப்பா பிரிவு அனைத்து ஊழியர்களும், சட்டப்பிரிவின் கணிசமான ஊழியர்களும் அவரவர் வீட்டில் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், மேற்கண்ட இரு பிரிவு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
ஏற்கனவே பல்வேறு மத்திய அமைச்சகங்களின் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.