புதுடெல்லி,
கொரோனா தடுப்பூசி மையங்கள் தினமும் இரவு 10 மணிவரை இயங்கலாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கூறியுள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பூசி மையங்கள் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரைதான் இயங்க வேண்டும் என்ற ஒரு கருத்து பரவி வருகிறது. ஆனால், இதுபோன்று எந்த நேர கட்டுப்பாடும் நிர்ணயிக்கப்படவில்லை.
தடுப்பூசி மையம் செயல்படும் நேரம், அங்குள்ள தேவையை பொறுத்தது ஆகும். தேவை அதிகமாக இருந்தால், கூடுதலாக குழுக்களை ஏற்பாடு செய்து தடுப்பூசி போடலாம்.
தடுப்பூசி மையம் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கக்கூடியதுதான். போதிய ஊழியர்களும், கட்டமைப்பு வசதிகளும் இருந்தால், தடுப்பூசி மையம் இரவு 10 மணி வரை செயல்படலாம்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பூசி மையங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வரிசையிலும், காத்திருப்பு பகுதியிலும் இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும். தடுப்பூசி திட்டத்தில் புதிய மைல்கல்களை எட்டுவதில் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.