பெங்களூரு,
கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த பல மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,250 கோடி மதிப்பிலான நிவாரணத்தை அந்த மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அதன்படி பூ, காய் மற்றும் பழ விவசாயிகள் என 95 ஆயிரம் பேருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்படும். ஆட்டோ, டாக்சி மற்றும் மேக்சிகேப் ஓட்டுநர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
முடி திருத்துவோர்,டெய்லர்கள், மெக்கானிக்குகள், செருப்பு தொழிலாளிகள் மற்றும் குப்பை சேகரித்து வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உதவி வழங்கப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார். தெருவோர வியாபாரிகளுக்கு 2 ஆயிரம் ரூபாயும், கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.