புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. இன்று 56,211 பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. இதனால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இதைபோல டெல்லியில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,60,611 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் டெல்லியில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கை வசதி அதிகரிக்கப்பட்டுள்ளன என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,
டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் ஒரு சில மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட சாதாரண மற்றும் அவசர சிகிச்சை படுக்கைகள் வசதி அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு படுக்கை வசதி கிடைப்பதை மேம்படுத்தும்.
கொரோனா பரவலை மாநில அரசு கவனித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இதனால் கவலைப்பட ஒன்றுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.