ராஞ்சி,
நாட்டின் பல மாநிலங்களைப் போல ஜார்கண்ட் மாநிலத்திலும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், நாட்டில் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாக அவர்களுக்கு இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் வழங்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தில் உயர் அதிகார குழு, சிறை சூப்பிரண்டுகளுக்கு ஒரு உத்தரவை வழங்கியுள்ளது. அதன்படி, 7 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளின் பட்டியலை தயாரிக்கும்படி கூறப்பட்டுள்ளது. பட்டியல் தயாரானதும், கோர்ட்டுகளின் மூலம் அவர்களுக்கு இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் உத்தரவு பெறப்பட்டு சிறைகளில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
சுமார் 7 ஆயிரம் சிறை கைதிகளுக்கு இவ்வாறு இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் வழங்கப்படும் என்றும், அதனால் சிறைகளில் நெரிசல் குறையும் என்றும் ஜார்கண்ட் மாநில சிறைத்துறை ஐ.ஜி. பிரேந்திர பூஷன் தெரிவித்தார்.