புதுடெல்லி,
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந்தேதி வெளியிட்ட அரசாணையில், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு தொடர்ந்த பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்ய இயலாது என்று ஏற்கனவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு இதே அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வருகிற 28-ந்தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.