புதுடெல்லி,
டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் பற்றி பேச உள்ளார் என்றும் தெரிவித்தது.
இந்தியாவும், டென்மார்க்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பசுமை யுக்தி கூட்டுறவை ஏற்படுத்தி கொண்டுள்ளன. அதுபற்றியும், இருநாடுகளுக்கும் இடையே உள்ள பல்வேறு விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளன. டென்மார்க்கில் 60-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களும், இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட டென்மார்க் நிறுவனங்களும் இருக்கின்றன என்றும், தொழில்நுட்பங்கள், விவசாயம், கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் இன்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவரை, பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். டெல்லி ராஷ்டிரபதி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய மெட்டே, எங்களின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியாவை நாங்கள் நினைக்கிறோம்.
இந்த வருகையை டென்மார்க் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளுக்கான மைல்கல்லாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதன்பின்னர், டெல்லியில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் இன்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.