புதுடெல்லி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வருகிற 24-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார். வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார். அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து பொது கூட்டம் ஒன்றில் நாட்டு மக்கள் முன் உரையாற்றுகிறார்.
டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் இருவரும் அவருடன் வரும் உயர்மட்ட தூதுக்குழுவின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
தூதுக்குழுவில் கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் மற்றும் வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் ஆகியோர் அடங்குவர்.
25-ந்தேதி டொனால்டு டிரம்ப்- பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை அதிகரித்தல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஈடுபாட்டை ஆழப்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை அதிகரித்தல் மற்றும் எச் 1 பி விசா பிரச்சினைகள் இடம்பெறும்.