மும்பை,
கொரோனா தொற்று மராட்டிய மாநிலத்தை கடுமையாக பாதித்துள்ளது. வைரஸ் தொற்று நோயை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறையில் உள்ள மூத்த அதிகாரிகளின் ஓய்வூதிய வயது வரம்பை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்தது. இது குறித்து சுகாதாத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நேற்று கூறியதாவது:-
கொரோனா தொற்றின் காரணமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் பணியாற்ற ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் உத்தவ்தாக்கரே தலைமையில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் தற்போது ஓய்வு பெறும் வயது வரம்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி ஓய்வு வயது 60-ல் இருந்து 62 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 899 பதவிகளுக்கு புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் காலியாக உள்ள 1,000 பதவிகளை நிரப்ப அடுத்த 4 நாட்களில் புதிதாக விளம்பரம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.