புதுடெல்லி,
டெல்லியில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது. குறிப்பாக கடந்த 15 ஆம் தேதி தினசரி பாதிப்பு விகிதம் 30 சதவிகத்தை கடந்து அதிர வைத்தது.
தொற்று பாதிப்பு அதிகரிப்பால் டெல்லியில் வார இறுதி ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது தொற்று பரவல் விகிதம் 10 சதவீதமாக சரிந்துள்ளது. இதனால், மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், டெல்லியில் கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், தொற்று பாதிப்பு உயரும் போது நாங்கள் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்.
இதனால் மக்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். கட்டாயமாக தேவை ஏற்பட்டதாலே கட்டுப்பாடுகளை விதித்தோம். டெல்லியில் 100 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். 82 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்என்றார்.