புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது விசாரணைக்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே அவர் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவருக்கு எதிரான ஆதாரங்களை அழித்து விடுவார் என்று சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த 16ஆம் தேதி நடந்து முடிந்தது நீதிபதி எஸ்.பி. கார்க் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று அந்த மனுவின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது .
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. ஜாமீன் தொகையாக ரூ 15 லட்ச ரூபாய் செலுத்தவும் , பாஸ்போர்ட்டை ஓப்படைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.