தேசிய செய்திகள்

டெல்லி கலவரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பிய சம்மனுக்கு தடை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு

டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த வன்முறைக்கு மறைமுகமாக பேஸ்புக் நிறுவனமும் காரணம் எனக்கூறி டெல்லி சட்டமன்ற அமைதி நல்லிணக்கக்குழு விசாரித்தது. பின்னர் இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் துணைத்தலைவரும், நிவாக இயக்குனருமான அஜித் மோகனுக்கு இக்குழு சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனுக்கு தடை விதிக்கக்கேட்டு அஜித் மோகன் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்து, மனு மீதான தீர்ப்பை கடந்த பிப்ரவரி 24-ந்தேதி ஒத்திவைத்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி சட்டமன்ற அமைதி நல்லிணக்கக் குழுவின் சம்மனுக்கு தடை விதிக்க மறுத்தது. இந்த சம்மனுக்கு பேஸ்புக் நிறுவனம் இணங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அப்போது, பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லை கடந்து மக்கள் மீது செல்வாக்கு செலுத்தும் அதிகாரம் கொண்டவையாக உள்ளன எனக்கூறிய நீதிபதிகள், இந்த சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் கருவிகள் பலரிடம் இல்லை எனவும் இதனால் பிரிவினை உருவாகிறது என்றும் தெரிவித்தனர்.