ஸ்ரீநகர்:
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசின.
பாலாகோட், சாக்கோதி, முசாபராபாத் ஆகிய இடங்களில் இருந்து முகாம்களை விமானப்படை குறி வைத்தது. 1,000 கிலோ அளவிலான குண்டுகளை முகாம்களை நோக்கி வீசியது.
இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள் (மிராஜ் 2000) இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விமானப்படை தாக்குதல் எப்படி நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து பிரதமரிடம் அஜித் தோவல் விளக்கம் அளித்து உள்ளார்.
இந்திய விமானப்படை தாக்குதலுக்கு பல தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் மோடி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கூட்டத்தில் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டு உள்ளனர்.
இந்திய விமானப்படை விமானிகளுக்கு என் வணக்கங்கள் என இந்திய விமானப்படையின் பதிலடிக்கு ராகுல்காந்தி ட்வீட் செய்து உள்ளார்.