புதுடெல்லி,
டெல்லியின் ஸ்வரூப் நகரில் வசித்து வருபவர் ரியா தேவி. கடந்த சில நாட்களாக தனது வீட்டின் முன், பக்கத்து வீட்டுக்காரர் வளர்த்து வரும் நாய் இயற்கை உபாதை கழிப்பதை கவனித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை காலை, தனது வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மீண்டும் அதே சம்பவம் நடந்ததை ரியா தேவி கவனித்தார்.
உடனடியாக அவர் வீட்டை விட்டு வெளியே வந்து அந்த நபரிடம் சத்தம் போட்டுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதனையடுத்து பக்கத்து வீட்டுக்காரர், தான் வளர்த்து வரும் நாயை ஏவி ரியா தேவியை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. அந்த நாய் கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் மீது ரியா தேவி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.