தேசிய செய்திகள்

குட்டி நாயை கேஸ் பலூனில் கட்டி பறக்கவிட்ட வாலிபர் கைது

குட்டி நாயை கேஸ் பலூனில் கட்டி பறக்கவிட்ட யூடியூப் சேனல் நடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி

டெல்லியைச் சேர்ந்த கவுரவ் என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையாளர்களாக உள்ளனர். இவர் வெளியிடும் வீடியோ ஒவ்வொன்றும் பல லட்சம் வியூஸ்களை அள்ளிக் குவிக்கிறது.

தனது வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக சமீபத்தில் இவர் ஹைட்ரஜன் பலூன்களில் தனது நாய்க்குட்டியை கட்டி, பறக்க விட்டபடி எடுத்த வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் நாயை கொடுமை செய்வதாக கருத்து தெரிவித்து வந்தனர். பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்ததை தொடர்ந்து அந்த வீடியோவை டெலிட் செய்தார்.

உரிய பாதுகாப்பு வசதிகளுடன்தான் நாயை பறக்க விட்டதாகவும், நாயை கொடுமை செய்யவில்லை என்றும் விளக்கம் தெரிவித்த அவர், இதனால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.

ஆனால் இவருக்கு எதிராக பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து டெல்லி மால்வியா நகர் போலீசில் புகார் அளித்தது.

இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.