பெங்களூரு,
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா(வயது 30). டாக்டரான இவர் நேற்று முன்தினம் பெங்களூரு வசந்த்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சிவாஜிநகரில் உள்ள பவுரிங் ஆஸ்பத்திரியில் பெங்களூரு வடக்கு மண்டல தாசில்தார் முன்னிலையில் டாக்டர் சதீஸ் தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் சவுந்தர்யாவின் உடல் சோழதேவனஹள்ளி அருகே அப்பிகெரேயில் உள்ள கணவர் நீரஜுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சவுந்தர்யா மரணம் குறித்து நீரஜ், ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் சவுந்தர்யாவின் மரணத்தை இயற்கைக்கு மாறான சாவு என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவின் பேத்தியின் மறைவுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், இரங்கல் தெரிவித்துள்ளார். பெங்களூரு காவேரி பவனுக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எடியூரப்பாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சவுந்தர்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.