தேசிய செய்திகள்

தேர்தலின்போது இடையூறு ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு 3 மாத சிறை தண்டனை - டெல்லி கோர்ட்டு தீர்ப்பு

சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. வாக இருப்பவர் மனோஜ் குமார். கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது மனோஜ் குமார் 50-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் கல்யாண்புரி பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற ஒரு பள்ளிக்கூட வாசலில் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து வாக்குச் சாவடி அருகே வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

மனோஜ் குமாருக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி சமர் விஷால் உத்தரவிட்டார். மேல்முறையீடு செய்ய ஏதுவாக அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது.