புதுடெல்லி,
பாராளுமன்றத்தில் நிதி மசோதாவில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ஆதார் எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டது.
வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டது. இதற்காக, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைக்கும் இணைய வசதியானது தொடங்கப்பட்டு உள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கலுக்கான இணையதளத்தில் https://incometaxindiaefiling.gov.in/ பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வசதியானது அறிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிடப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்து பயனாளர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
இணையதளத்தில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பான் கார்டு எண், ஆதார் எண் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் கொடுக்கப்பட்ட சரியான பெயரை கொடுக்கவேண்டும்.
வருமான வரித்துறை வழங்கிஉள்ள அறிவுரையின்படி, ஆதார் திட்டத்தை ஒருங்கிணக்கும் இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் யுஐடிஏஐ சோதனை செய்தபின்னர், இணைப்பு உறுதிசெய்யப்படும். கொடுக்கப்பட்ட ஆதார் பெயரில் ஏதேனும் சிறிய பிழை இருப்பின், ஆதார் ஒடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) தேவைப்படும், என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஒன் டைம் பாஸ்வேர்ட் பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண், இ-மெயிலில் அனுப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியானது தோல்வியின்றி நிறைவடைய பயனாளர்கள் பான் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிறந்த தேதி மற்றும் பாலினம் சரியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தனியாக லாக்-இன் எதுவும் தொடங்கவேண்டாம். வருமான வரி கணக்கு தாக்கலுக்கான இணையதளத்தில் சென்று யார் வேண்டுமானாலும் அவர்களுடைய பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.