ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் ரைசிங் காஷ்மீர் என்ற நாளிதழ் செயல்பட்டு வருகிறது. காஷ்மீரில் மிகவும் பிரபலமான இந்த பத்திரிகையின் ஆசிரியரான ஷுஜாத் புகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிரஸ் காலனி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது புகாரியை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். காஷ்மீரில் நீண்ட காலத்திற்கு பிறகு பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்படுவது இதுதான் முதல் தடவையாகும்.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் காவல்துறை புகாரிக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்த சூழலில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையினர் இருவரும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரம்ஜானுக்கு முதல் நாளில் பயங்கரவாதம் தனது கொடூரத்தை காட்டியுள்ளது புகாரியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். புகாரியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.