தேசிய செய்திகள்

வதோதரா நகரை சுத்தமாக வைக்க 40 மின் ரிக்‌ஷாக்கள் அறிமுகம்

வதோதரா (பரோடா) நகர்மன்றம் நகரின் தூய்மையை நெருக்கமாக கண்காணிக்க 40 மின் ரிக்‌ஷாக்களை அறிமுகம் செய்யவுள்ளது.

வதோதரா

இந்த ரிக்ஷாக்களை நாளை உலக சுற்றுச்சூழல் தினத்தில் துவக்கி வைக்கவுள்ளனர்.

நகர்மன்றத்தின் ஆணையர் வினோத் ராவ் கூறும் போது, இந்த மின் ரிக்ஷாக்கள் நகரின் பல பகுதிகளில் பயணித்து சுத்தத்தை உறுதிப்படுத்தும். சுகாதாரப் பணியாளர் ஒருவர் வண்டியை ஓட்டுவதோடு குப்பையை எங்கு கண்டாலும் உடனடியாக அவற்றை சுத்தப்படுத்துவார்கள் என்றார்.

ஓட்டுநரோடு பயணிக்கும் அதிகாரி கண்ட இடத்தில் குப்பை கொட்டி தவறு செய்பவர்களுக்கு உடனடியாக சலான் அளித்து அபராதம் வசூல் செய்வார்கள் என்கின்றார் ராவ். இத்துடன் மக்களை கூட்டமாக திரட்டி திடக்கழிவுகளை வகைப்படுத்தி பிரித்து குப்பைக் கூடைகளில் போடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உறுதிமொழியையும் ஏற்க செய்யும் பணியும் நடைபெறவுள்ளது.

மேலும் குப்பைக்கூடைகளை நகரின் அனைத்து 12 வார்டுகளிலும் கொடுத்துள்ளோம். இதன் நோக்கம் குப்பையை வகைப்பிரித்து போட வைப்பதை திறமையாக நடைமுறைபடுத்துவதற்கே என்றும் அவர் விளக்கினார். வதோதராவின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினார் ரஞ்சன்பென் பட் கூறும் போது, மகாத்மா காந்திக்கு தூய்மை என்பது நெஞ்சிற்கு நெருக்கமானது; அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி, அதுவும் அவரது 150 ஆவது பிறந்த நாளை 2019 ஆம் ஆண்டில் கொண்டாடவிருக்கும் நிலையில் செலுத்துவது என்பது நகரை தூய்மையாக வைத்திருப்பதேயாகும்.

வதோதரா நகரத் தந்தையான பரத் டாங்கர் கூறும்போது, நகரின் தூய்மைக்காக நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றார்.

நகரமானது தினசரி 1,200 டன் திடக்கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இந்தியா முழுவதும் நடைமுறையிலுள்ள ஸ்வச் பாரத் திட்டத்தின் அட்டவணையில் வதோதரா நகரம் பத்தாவது இடத்திலுள்ளது.