மீரட்,
பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நேற்று உத்தரபிரதேசத்தில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். மீரட் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தையும் இதே மீரட் நகரில் இருந்து தொடங்கினேன். அப்போது, நீங்கள் காட்டிய அன்பை வட்டியுடன் திருப்பித் தருவேன் என்று கூறினேன். மேலும், 5 ஆண்டு சாதனை அறிக்கையை வெளியிடுவேன் என்றும், அதுபோல், 60 ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று எதிர்தரப்பிடம் கேட்பேன் என்றும் கூறினேன்.
நான் சொன்ன மாதிரியே எனது சாதனை அறிக்கையை சில நாட்களில் வெளியிடப்போகிறேன். அத்துடன், கடந்த காலத்தில் நீங்கள் ஏன் செயல்படவில்லை, துரோகம் செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்பேன்.
ஒருபுறம், வலிமையான வளர்ச்சி, மற்றொரு புறம் தொலைநோக்கு பார்வையற்ற எதிர்க்கட்சி. ஒருபுறம், காவலாளி. மற்றொரு புறம், களங்கப்பட்ட தலைவர்கள். இந்த தேர்தல், உறுதியான அரசுக்கும், உறுதியற்ற கடந்த காலத்துக்கும் இடையிலான போட்டி. இதில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதற்கு இங்கே கூடி இருக்கும் மக்களே சாட்சி.
நான் குழந்தையாக இருந்தபோது, வறுமையை ஒழிப்போம் என்று இந்திரா காந்தி கோஷமிட்டதை கேட்டிருக்கிறேன். ஆனால், ஏழைகளுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தே வந்துள்ளது. வறுமைக்கு காரணமே காங்கிரஸ்தான். காங்கிரஸ் கட்சி ஒழியும்போது, வறு மையும்ஒழிந்து விடும்.