தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக பேச ஐரோப்பிய எம்.பி.க்கள் அழைக்கப்பட்டு இருக்கலாம்; ப. சிதம்பரம்

நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக பேச ஐரோப்பிய எம்.பி.க்கள் அழைக்கப்பட்டு இருக்கலாம் என ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள கள நிலவரம் பற்றி அறிவதற்காக, ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்தனர்.

4 எம்.பி.க்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பிய நிலையில், 23 எம்.பி.க்கள் நேற்று காஷ்மீருக்கு சென்றனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டலுக்கு குண்டு துளைக்காத கார்களில் அழைத்து செல்லப்பட்டு காஷ்மீர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரது காவலை ஒரு நாள் நீட்டிக்க கோரிய அமலாக்க துறையின் மனு நிராகரிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு வருகிற நவம்பர் 13ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து, 3 வேளை வீட்டு உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை விதிகளுக்கு உட்பட்டு வழங்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதன்பின்பு டெல்லி திகார் சிறைக்கு ப. சிதம்பரம் போலீசாரால் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அவரிடம், ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு நேற்று வருகை தந்துள்ள ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ப. சிதம்பரம், நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக பேச ஐரோப்பிய எம்.பி.க்கள் அழைக்கப்பட்டு இருக்கலாம். யாருக்கு தெரியும்? அதுவும் நடக்கலாம் என கூறியுள்ளார்.