புதுடெல்லி,
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டு பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது என பகுஜன் சமாஜ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் இதே குற்றச்சாட்டினை எழுப்பியதுடன் மீண்டும் காகித முறையிலான ஓட்டு பதிவு நடத்தும்படி வலியுறுத்தின.
தேர்தல் ஆணையமோ மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என தொடர்ந்து கூறி வந்தது.
ஆனால், இயந்திரங்களில் முறைகேடு நடக்கிறது என்பதனால் மக்களுக்கு அதன் மீதுள்ள நம்பிக்கை முற்றிலும் போய் விட்டது என பல்வேறு எதிர்க்கட்சிகளும் கூறியதனை அடுத்து அதனை தேர்தல் ஆணையம் சவாலாக ஏற்று கொண்டது.
தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 49 மாநில கட்சிகளை இந்த சவாலுக்கு வரும்படி ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆகியோருக்கு அழைப்பு விடப்படவில்லை. வெளிநாட்டு நிபுணர்களுக்கும் அனுமதியில்லை.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த சவாலுக்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் விண்ணப்பித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட 4 மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் டெல்லிக்கு கொண்ட வரப்பட்டன. அவை 2 கட்சிகளுக்கும் வழங்கப்பட்டன.
அதன்படி காலை 10 மணியளவில் இந்த 4 மணிநேரத்திற்கான சவால் தொடங்கியது. கடந்த 3 மணிநேரத்திற்கும் மேல் தொடர்ந்து ஹேக்கிங் செய்யும் முயற்சியில் இரு கட்சிகளும் இறங்கியுள்ளன.
தேர்தல் ஆணையத்திற்கு உதவியாக உள்ள தொழில் நுட்ப குழுவின் உறுப்பினர்கள் நடுவராக செயல்படுவர்.
எனினும் இதுவரை இரு கட்சிகளும் தொடர்ந்து ஹேக்கிங் செய்வதற்கான முயற்சியிலேயே உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.