மும்பை,
மும்பையில் பந்திரா புறநகர் பகுதியில் 5 நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்தி திரைப்பட நடிகை ஊர்வசி ரவுடெலா சென்றுள்ளார். அந்த ஓட்டலின் பணியாளர் ஒருவர் அவரை அணுகி உங்களது பெயரில் ஓட்டலின் அறை ஒன்று பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
இதனை அடுத்து ஊர்வசி தனது செயலாளரை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டுள்ளார். ஆனால் ஓட்டலில் அறை எதனையும் பதிவு செய்யவில்லை என அவர் கூறியுள்ளார். உடனே ஓட்டலின் பெயர் பதிவு ஆவணங்களை ஊர்வசி சரிபார்த்துள்ளார்.
அதில், அவரது பெயரில் போலியான ஆதார் அட்டை ஒன்றை பயன்படுத்தி ஓட்டலில் அறை புக் செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆன்லைன் வழியே போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி தவறான எண்ணை கொண்டு ஓட்டலின் அறையை புக் செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
இதுபற்றி நடிகை ஊர்வசி ரவுடெலா போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்), 468 (மோசடி) ஆகியவற்றின் கீழ் குற்ற வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஓட்டல்களில் தங்க வரும் விருந்தினர்களிடம் பொதுவாக அடையாள சான்று கேட்கப்படுவது வழக்கம். ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண் ஒரு நபரின் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக எடுத்து கொள்ளப்படுகிறது.