புதுடெல்லி,
இந்த பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெயின் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இறக்குமதி வரி குறைப்பு, இருப்பு வைக்க கட்டுப்பாடுகள், விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளின் பலனாக நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை கடந்த சில நாட்களில் ரூ.5 முதல் ரூ.20 வரை குறைந்திருப்பதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லியில் கடந்த 31-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பாமாயில் கிலோ ஒன்றுக்கு ரூ.6 குறைந்திருக்கிறது. சூரியகாந்தி எண்ணெய் ரூ.10-ம், கடுகு எண்ணெய் ரூ.6-ம் குறைந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவுத்துறை செயலாளர் சுதான்சு பாண்டே, நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக சமையல் எண்ணெய் விலை குறைந்து வருகிறது. சர்வதேச அளவில் இவற்றின் விலை அதிகமாக உள்ளபோதும், அரசின் முயற்சியால் உள்நாட்டில் குறைந்து வருகிறது என்று கூறினார்.
இவ்வாறு சமையல் எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.