புதுடெல்லி,
டெல்லியில், பத்திரிகை விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
முன்பெல்லாம், ஒரு செய்தியை உருவாக்குவதற்கு என்ன? எப்போது? ஏன்? எங்கே? யார்? எப்படி? ஆகிய கேள்விகள் கேட்டு பதில் பெறவேண்டும் என்பார்கள். ஆனால், இப்போது பொய் செய்திகள் புதிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது. அத்தகைய செய்திகளை உருவாக்குபவர்கள், தங்களை பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொண்டு, இந்த நேர்மையான தொழிலை களங்கப்படுத்தி விட்டனர்.
சுயகட்டுப்பாடு, பொறுப்புணர்வு எல்லாம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அம்பலப்படுத்தும் செய்திகள் புறக்கணிக்கப்படுகின்றன. அற்பமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று அவர் பேசினார்.