புதுடெல்லி,
அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற பிரசாரம் இந்திய தேர்தலின் போதும் மேற்கொள்ளப்படலாம் என்ற எச்சரிக்கையுள்ளது. கும்பல் தாக்குதல் விவகாரத்தில் போலியான செய்திகளை எதிர்க்கொள்ள மத்திய அரசு சமூக வலைதள நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாட்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வாட்ஸ்-அப் நிறுவனம் போலி செய்திகள் பரவலை தடுக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம், எங்களுடைய தளங்களை போலி செய்திகளை பரவ அனுமதிக்க மாட்டோம் என பேஸ்புக், டுவிட்டர் உறுதியளித்துள்ளது.
தேர்தலின் புனிதத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்தஒரு செயலுக்கும் எங்களுடைய தளங்களை அனுமதிக்கமாட்டோம் என
கூகுள், பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளது என தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கூறியுள்ளார். இது கர்நாடக தேர்தலின் போது பரிசோதனை செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தகவல்கள் மற்றும் போலியான செய்திகளை கண்டறிய பேஸ்புக், டுவிட்டர் உதவி செய்வதாக கூறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.