தேசிய செய்திகள்

தீவிரவாதி மரணம் அடைவது கூட எனக்கு வலியை தருகிறது; ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர்

தீவிரவாதி ஒருவர் மரணம் அடைவது கூட எனக்கு வலியை தருகிறது என ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் கூறியுள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநராக இருப்பவர் சத்ய பால் மாலிக். இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்பொழுது, ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநராக பொறுப்பேற்றபொழுது, பாதுகாப்பு படையினருக்கு சிறந்த வசதிகளை செய்து தர முயன்றேன்.

அவர்கள் கடுமையான சூழ்நிலைகளிலும் மற்றும் கடும் பனி சூழ்ந்த நிலையிலும் செயல்பட்டனர். அது மிக கடுமையான பணி. அதனை நான் கண்டேன். சிறந்த முறையில் போலீசார் தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்துவதில் இவர்கள் வெற்றி அடைந்து உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

ஆனால் தீவிரவாதி ஒருவர் மரணம் அடைவது கூட எனக்கு வலியை தருகிறது. அவர்கள் அனைவரும் வன்முறையை கைவிட்டு பொது வாழ்க்கைக்கு மீண்டும் வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.