மங்களூரு:
உடுப்பி மாவட்டம் கார்கலாவை சேர்ந்தவர் பிரமீளா (வயது 32). இவர் கார்கலா மார்க்கெட் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சீக்கிரமாக அலுவலகத்துக்கு பிரமீளா வந்துள்ளார். பின்னர் அவர் திடீரென்று தான் கொண்டு வந்த சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் அலுவலகத்துக்கு வந்த ஊழியர்கள், பிரமீளா தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கார்கலா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பிரமீளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து கார்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.