இட்டாநகர்,
அருணாசலப்பிரதேச மாநிலம் இட்டாநகரில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் எரிந்து நாசமாயின.
முன்னதாக நேற்று இட்டாநகரில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் உள்ளவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென மரக்கூரைகளில் தீப்பிடித்து வீடுகளின் மேல் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
செய்தியறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும் தீயணைப்பு துறையினர் வருவதற்கு முன்னதாகவே தகர கூரைகளால் ஆன 12 வீடுகள் எரிந்து நாசமாயின. தீ விபத்தின் போது வீடுகளில் இருந்த கேஸ் சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்தன. ஆனாலும் இந்த தீ விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.