புதுடெல்லி,
பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை முறையாக பின்பற்றவில்லை என்றும், அதேபோல விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பல மாநிலங்களின் காவல்துறை தவறிவிட்டது என்றும் பல தரப்புகளில் புகார் எழுந்துள்ளது.
மேலும், டெல்லியில் மட்டுமே 643 விதிமீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. குறிப்பாக, உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் தீபாவளியின் போது கட்டுப்பாடின்றி பட்டாசு வெடிக்கப்பட்டது.
எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை முறையாக அமல்படுத்தாத மாநில அரசுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரிய சுற்றுசூழல் ஆர்வலர் சுபாஷ் தத்தா சார்பில், வருகிற 12-ந் தேதி கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.