ராஞ்சி,
ஜார்கண்ட் மாநில முன்னாள் மந்திரியும், பாரதீய ஜனதா கட்சியின் தலைவருமான சாம்ரேஷ் சிங்கிற்கு, இருபது வருடங்களுக்கு முந்தைய வழக்கில் திங்கட்கிழமை கோர்ட்டு சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து சாம்ரேஷ் சிங் தான்பாத்தில் உள்ள பாடலிபுத்ரா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செவ்வாய் கிழமை காலை 9 மணிக்கு அவரை மருத்துவர்கள் சோதனை செய்தார்கள். அவரை மருத்துவமனையில் காணவில்லை. இதனையடுத்து அவர் காவலில் இருந்து தப்பிவிட்டார் என செய்திகள் பரவிஉள்ளது. இது மாநில போலீசுக்கு பெரும் தலைவலியாகியது.
காலை 9 மணிக்கு வெளியேறிய சாம்ரேஷ் சிங் மாலை 4 மணியளவில் மருத்துவமனைக்கு அவராகவே வந்தார். விசாரணையில் அவர் மருத்துவமனையில் வெஸ்டன் டாய்லெட் வசதி இல்லாததால் நான் அருகே உள்ள என்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றேன் என்று கூறிஉள்ளார்.
இதனையடுத்து முதல்கட்ட விசாரணையை மருத்துவமனையில் முன்னெடுத்த மாநில காவல்துறை அவருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் நியமனம் செய்யப்பட்ட 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து உள்ளது. விசாரணையில் நீதிமன்றத்தில் எந்தஒரு தகவலையும் தெரிவிக்காமல் போலீசார் சாம்ரேஷ் சிங்கை நண்பரின் வீட்டிற்கு அனுமதித்து உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதற்கிடையே மிகப்பெரிய மருத்துவமனையில் இதுபோன்ற வசதிகள் இல்லை என கூறுவது மிகவும் அதிர்ச்சியாகதான் உள்ளது என கூறிஉள்ளார் சாம்ரேஷ் சிங்.