புதுடெல்லி,
உத்தரகாண்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் ஹரித்வார் நகரில் பேரணி ஒன்றை இன்று நடத்தினார். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ஹரித்வார் நகரில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் இன்று பேசிய டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால், டெல்லியில் எங்களுடைய ஆட்சி அமைவதற்கு 70 சதவீத ஆட்டோ ஓட்டுனர்கள் பங்காற்றி உள்ளனர்.
எங்களது ஆட்சிக்கு முன்பு, ஒவ்வோர் ஆட்டோ ஓட்டுனரும், போலீசாரில் இருந்து அரசாங்கம் வரை லஞ்சம் கொடுக்கும் வழக்கம் இருந்தது. நாங்கள் இந்த நடைமுறையை மாற்றி உள்ளோம். டெல்லியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களில் சிலர் இன்னும் தன்னுடைய மொபைல் போன் எண்ணை வைத்திருக்கின்றனர் என கூறியுள்ளார்.
இந்திய வரலாற்றில் ஆட்டோ ஓட்டுனர்கள் போன் நம்பர் வைத்திருக்கும் முதல் முதல்-மந்திரியாக நானாகவே இருப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.