புதுடெல்லி,
நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் விவரத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சிறப்பான பணியாற்றிய நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ரா, சோனு நிகாம் உள்ளிட்ட மொத்தம் 107 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி உள்ளனர். இதில் எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம், நடிகை சவுகார் ஜானகி உள்பட தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்காள மாநில முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா தனக்கு பத்ம பூஷன் விருது வேண்டாம் என நிராகரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பத்ம பூஷன் விருது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதைப்பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. எனக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டால், அதை ஏற்கப்போவதில்லை என்று அவர் தெரிவித்தார். புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அந்த விருது வேண்டாம் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.