தேசிய செய்திகள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

அவருடைய உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த 24-ந்தேதி இரவு 10.22 மணியளவில் உடல்நல பாதிப்புக்காக சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் தொற்று ஏற்பட்டது என கூறப்படுகிறது. அவருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில், அவருடைய உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவரான டாக்டர் அஜய் ஸ்வரூப் கூறும்போது, சோனியா காந்திக்கு ஏற்பட்ட குறிப்பிட்ட தொற்று பாதிப்புக்காக, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட மருந்துகள் கொடுக்கப்பட்டன.

டாக்டர்கள் டி.எஸ். ராணா, எஸ். நன்டி, அரூப் பாசு ஆகிய 3 பேரும் சிகிச்சை அளித்தனர். இதில் அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அவர் குணமடைந்து உள்ளார். இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். வீட்டில் சில நாட்கள் அவர் ஓய்வெடுப்பார். தொடர்ந்து சிகிச்சையும் தரப்படும் என்று கூறினார்.