புதுடெல்லி,
கேரளாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சூரஜ், துணை கலெக்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து மாநில ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.
இதில் சூரஜின் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டது. அதன்படி 13 அசையா சொத்துகள், 4 வாகனங்கள், ரூ.23 லட்சம் என ரூ.8.80 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த தகவலை அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிட்டனர். 1994-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சூரஜ், மாநில வனத்துறை அதிகாரியாக பணியை தொடங்கி பின்னர் வருவாய்த்துறைக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.