தேசிய செய்திகள்

நாட்டின் ஜி.டி.பி. வீழ்ச்சி ஏற்று கொள்ள முடியாதது; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

நாட்டின் ஜி.டி.பி. வீழ்ச்சி ஏற்று கொள்ள முடியாதது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வருத்தமுடன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2வது காலாண்டில் 4.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எட்டு முக்கிய தொழிற்சாலைகளின் உற்பத்தி கடந்த அக்டோபரில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுபற்றி பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கிறது. ஆனால் அதனை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக்குரிய வகையில் உள்ளது என கூறினார்.

அவர் தொடர்ந்து கூறும்பொழுது, முதல் காலாண்டில் 5 சதவீதம் என்ற அளவில் இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2வது காலாண்டில் 4.5 சதவீதமாக கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது வருத்தத்திற்கு உரியது. இது முற்றிலும் ஏற்க இயலாதது. வளர்ச்சியானது 8 முதல் 9 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும் என கூறினார்.