புதுடெல்லி,
டெல்லியில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84). கடந்த 9-ந்தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். எனவே அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்குப் பிறகு பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆழ்ந்த கோமா நிலையில் உள்ள அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் பிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாட்டில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த கோமா நிலையில் இருக்கும் அவர் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.