கொல்கத்தா,
மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த மார்ச் 27ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1, 6, 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன. இன்று 6வது கட்ட தேர்தல் நடந்தது.
மேற்கு வங்காளத்தின் தபன் பகுதியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மே 2ந்தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவரும். வருகிற மே 5ந்தேதிக்கு பின் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நாங்கள் இலவச தடுப்பூசி போடுவோம் என கூறினார்.
சீரம் இந்தியா நிறுவனம் தனது கோவிஷீல்டு தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்த நிலையில், மம்தாவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 என விற்பனை செய்யப்படும் என்று சீரம் இந்தியா அறிவித்தது.
அந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் மொத்த தடுப்பூசியில் 50 சதவீதம், இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீதம் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.