சோனிபட்,
அரியானாவில் அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், மாநிலம் முழுவதும் யாத்திரை சென்று வருகிறார். ஜன ஆசீர்வாத யாத்திரை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை சோனிபட் மாவட்டத்தில் நடந்தது.
முதல்-மந்திரியின் யாத்திரை வாகனம் ரத்தனா கிராமத்தில் சென்றபோது, அந்த கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் சூடு தாங்காமல் அங்குமிங்கும் ஓடினார். முதல்-மந்திரி கண்முன்னே நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனே அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு ரோத்தக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வேலை கிடைக்கவில்லை. எனவேதான் இந்த செயலில் ஈடுபட்டேன் என்று அவர் கூறினார்.