பெங்களூரு,
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கவுரி லங்கேஷ்(வயது 55) அவருடைய வீட்டில் வைத்து கடந்த மாதம் (செப்டம்பர்) 5ந் தேதி மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை உளவுத்துறை ஐ.ஜி. பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் தேடிவருகிறார்கள். கவுரி லங்கேசின் வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் 2 நபர்களின் வரைபடங்களை கடந்த 14ந் தேதி சிறப்பு விசாரணை குழுவினர் வெளியிட்டனர். இதில், ஒரு கொலையாளியின் படம் 2 பரிமாணங்களில் இருந்தன.
மேலும், கவுரி லங்கேசை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் மோட்டார் சைக்கிளில் அவருடைய வீட்டை நோட்டமிட்டு செல்வது போன்ற வீடியோவையும் சிறப்பு விசாரணை குழுவினர் வெளியிட்டனர். அந்த வீடியோவில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் செல்லும் நபரின் முகத்தை வெளிநாட்டு போலீசாரின் உதவியுடன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறப்பு விசாரணை குழுவினர் அடையாளம் காண முயற்சித்தனர். இருப்பினும், ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் செல்லும் நபரின் முகம் தெளிவாக தெரியவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறப்பு விசாரணை குழுவினர் நடத்திய விசாரணையில், வீடியோவில் உள்ள மோட்டார் சைக்கிள் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. அதாவது, அந்த மோட்டார் சைக்கிள் புனேயில் இருந்து வாங்கப்பட்டு இருப்பதும், சிவமொக்காவில் இருந்து அந்த மோட்டார் சைக்கிள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் மோட்டார் சைக்கிள் பற்றிய துப்பு கிடைத்துள்ளதால் கொலையாளிகள் விரைவாக பிடிக்க சிறப்பு விசாரணை குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.