ஹூக்ளி,
மேற்கு வங்கத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தாயின் மீது, பொம்மை துப்பாக்கி என்று நினைத்து நிஜ துப்பாக்கியால் சுட்ட துரதிஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் கானாகுல் பகுதியை சேர்ந்த காகோலி ஜனா என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்துள்ளார். இதை எடுத்து கொண்டு வீட்டிற்குள் சென்ற சிறுமியின் தாய் காகோலி ஜனா, இது பொம்மை துப்பாக்கி என்று நினைத்து அந்த சிறுமியிடம் கொடுத்துள்ளார். அந்த துப்பாக்கியை வைத்து விளையாடிய சிறுமி தனது தாயை பார்த்து துப்பாகியால் சுட்டார். அந்த துப்பாக்கியில் இருந்த தோட்டா தாயின் உடம்புக்குள் பாய்ந்தது.
இதனால் தாய் காகோலி ஜனா பலத்த காயமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில், தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். அவரது நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த சிறுமி மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நடப்பது வழக்கம். அமெரிக்காவில் சுலபமாக துப்பாக்கி உபயோக படுத்துகின்றனர். ஆனால், இந்தியாவில், அரிதாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கிறது. மேலும் இந்தியாவில் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு கடுமையான சட்டங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.